ஆலந்தூர்: ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி ஹெராயின் போதை பொருளை விற்ற அசாம் வாலிபர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம், பரங்கிமலை போன்ற பகுதிகளில் ஹெராயின் போதை பொருள் விற்பதாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் எஸ்.ஐ. அகஸ்டின் தலைமையிலான போலீசார், மீனம்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுயில் ஒருவர் தள்ளாடியபடி வந்தார்.
அவரை பிடித்து விசாரித்தபோது, பழைய குற்றவாளி என்பதும் ஹெராயின் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஹெராயின் எங்கிருந்து வாங்கினாய்’ என போலீசார் கேட்டதற்கு, ‘சென்னை தேனாம்பேட்டையில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் முபாரக் அலி என்பவர் மூலம் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து தனிப்படை போலீசார், தேனாம்பேட்டைக்கு விரைந்து சென்று முபாரக் அலியை (27) கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி ஹெராயின் போதை பொருளை விற்று வந்த மன்சூர் இஸ்லாம் (28) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 25 கிராம் ஹெராயின் போதைப்பொருளை தனிப்படை போலீசார் கைப்பற்றி 2 பேரையும் பரங்கிமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பரங்கிமலை இன்ஸ்பெக்டர் பாலன் வழக்கு பதிவு செய்து இருவரையும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.