சென்னை: சென்னையில் வரும் 27, 28ம் தேதிகளில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதேபோன்று, அடுத்த நாள் 28ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது.
இந்த கூட்டங்களில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும், வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. எனவே, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாட்களில் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.