சென்னை: ஐ.டி, சி.பி.ஐ அமலாக்கத்துறை போன்றவை பாஜகவின் அணிகள் போல் செயல்படுகிறது. பாஜகவை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
banneet.in என்ற ஆன்லைன் தளம் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். போஸ்ட் கார்டு மூலம் சுமார் 8 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை சந்தித்து கையெழுத்து பெறுவேன். திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை இது கிடையாது. இது ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை, மருத்துவ உரிமை.
நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். நீட் விலக்கு கோரி பெறப்படும் கையெழுத்துக்கள் குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சோதனைகள் அதிகரித்துள்ளது. சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்றவை பா.ஜ.கவின் அணிகள் போல் செயல்படுகிறது. பாஜகவை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் இவ்வாறு கூறினார்.