சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் வரும் 27ம் தேதி கூடுகிறது. இதில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை பெறுவது குறித்து வலியுறுத்தப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்துக்கும், கர்நாடகாவுக்கும் இடையே நீண்டகாலமாக காவிரி தண்ணீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்னை உள்ளது. கடந்த மே 22ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40வது கூட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வரும் 27ம் தேதி நடக்கிறது. இதில் தமிழக அரசின் சார்பில் அரசின் நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்ப குழுவின் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அதேபோல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி சார்பில் அந்த மாநிலங்களை சேர்ந்த நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய நீர் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூலையில் 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.