Sunday, September 24, 2023
Home » காவிரி தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்கை செப்.6ல் விசாரணைக்கு எடுப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!!

காவிரி தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்கை செப்.6ல் விசாரணைக்கு எடுப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு..!!

by Kalaivani Saravanan

டெல்லி: காவிரி தொடர்பாக தமிழகம் தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 6ல் விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் அமர்வு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு 24,000 கன அடி நீர் திறக்க கோரியிருந்த நிலையில் கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடுவதற்கு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அந்த தண்ணீர் போதாது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் அமர்வானது, கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி காவேரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்தியதா? கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட்டுள்ளதா? என்பது குறித்து செப்டம்பர் 1ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனிடையே கடந்த மாதம் ஆகஸ்ட் 28, 29ல் காவேரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு மீண்டும் தண்ணீரை திறந்து விடுவதற்கு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவுப்படி தற்போது கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இந்த சூழலில் வழக்கு விசாரணை இன்று பட்டியலிடப்படாத நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டது. தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் சூழல் உள்ளது. எனவே அதிகப்படியான தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடுவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருப்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் விரைந்து விசாரிப்பதற்கு கர்நாடக அரசு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கை 11ம் தேதிக்கு விசாரித்தால் போதும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஏற்கனவே நாங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், தமிழ்நாடு அரசு சார்பில் முறையிடப்பட்டதை அடுத்து வழக்கை புதன்கிழமை (செப்.6) விசாரிப்பதாக அறிவித்தனர். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் முறையீட்டை ஏற்று வரும் புதன்கிழமை காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?