Friday, December 8, 2023
Home » 5,000 கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவிட்ட, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்துக : கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

5,000 கன அடி காவிரி நீரை திறக்க உத்தரவிட்ட, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்துக : கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

by Porselvi

பெங்களூரு : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்த கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசியல் கட்சியினர், விவசாய மற்றும் கன்னட அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 24,000 கன அடி நீர் திறந்து விட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், செப் 13 முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் தமிழகத்திற்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இதனை எதிர்த்து கர்நாடக அரசு நேற்று அவசர மனு தாக்கல் செய்தது. மேற்கூறிய மனுக்கள் இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவிரியில் இருந்து கர்நாடகா, தொடர்ந்து குறைவாகவே தண்ணீர் திறப்பதாக தமிழ்நாடு அரசு புகார் தெரிவித்தது. இதற்கு காவரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுபடியே தண்ணீர் திறக்கப்பட்டுவதாக கர்நாடகா தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதனை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, வினாடிக்கு 12,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்; குறைவான மழை பெய்யும் காலங்களில் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என முறையிட்டது. மேலும் தமிழ்நாட்டில் 50% வறட்சி நிலவுவதாகவும் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபதி செய்யப்பட்டுள்ளது என்றும் நீர் இல்லாததால் பயிர் கருகும் நிலையில் உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

இதனிடையே தமிழகத்திற்கு 2,500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என கர்நாடக அரசு திட்டவட்டமாக வாதிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்க முடியாது என கூற முடியாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது.24,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?