டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆக.11-ல் நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவருமாரு தமிழ்நாடு கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் சவுமித்ர குமார் ஹல்தர் அழைப்புவிடுத்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில், நீர்வரத்து எவ்வாறு உள்ளது, கர்நாடக அணைகளில் நீர்வரத்து எவ்வாறுஉள்ளது, நீர் வெளியேற்றம், நீர் இருப்பு ஆகியவை குறித்து விவாதிக்கபடும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தண்ணீர் திறந்து விடவில்லை என்ற குற்றசாட்டை தொடர்ந்து முன்வைத்து வருகிறது. கடந்த மாதம் 20- தேதி டெல்லி வந்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்தார்.
தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் கர்நாடக அரசு காவிரியில், 26.3 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாடிற்கு திறந்து விடவேண்டும், ஆனால் 3.78 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. எஞ்சிய 22.54 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதி 13 நாட்கள் ஆன நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்ட அதன் தலைவர் சவுமித்ர குமார் ஹல்தர் அழைப்புவிடுத்துள்ளார்.