Thursday, May 15, 2025
Home செய்திகள்Banner News ஜாதி அடிப்படையில் இல்லாமல் எந்த தொழிலையும் யாரும் செய்யலாம்: கலைஞர் கைவினை திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜாதி அடிப்படையில் இல்லாமல் எந்த தொழிலையும் யாரும் செய்யலாம்: கலைஞர் கைவினை திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by Neethimaan

* 8951 பேருக்கு ரூ.170 கோடி கடன்
* குலத்தொழில் முறையை ஊக்குவிக்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்றும் உறுதி

சென்னை: ஜாதி அடிப்படையில் இல்லாமல் எந்த தொழிலையும் யாரும் செய்யலாம். குலத்தொழில் முறையை ஊக்குவிக்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று சென்னை அருகே கலைஞர் கைவினை திட்டத்தை தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார். மேலும், 8951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடியில் கடன் ஒப்புதல் ஆணைகளையும் அவர் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, 8951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ரூ.7.29 கோடியில் நிறுவப்பட்டுள்ள பேராவூரணி கயிறு குழுமம், ராமநாதபுரம் மாவட்டம், வசந்த நகரில் ரூ.6.72 கோடியில் நிறுவப்பட்டுள்ள நகை உற்பத்தி குழுமம், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நகரில் ரூ.1.15 கோடியில் நிறுவப்பட்டுள்ள மகளிர் எம்ராய்டரிங் குழுமம் ஆகியவற்றை திறந்து வைத்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் அனைத்து கைவினை கலைஞர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக, இன்று தொடங்கி வைக்க இருக்கக்கூடிய இந்த கலைஞர் கைவினைத் திட்டம் என்பது சமூகநீதியை – சமநீதியை – மனிதநீதியை – மனித உரிமை நீதியை நிலைநாட்டக்கூடிய திட்டம். இந்த திட்டத்தின் சிறப்புகளை சொல்வதற்கு முன்னே, ஏன் இந்த திட்டத்தை உருவாக்கினோம் என்ற அரசியல் பின்னணியை சொல்ல விரும்புகிறேன்.

ஒன்றியத்தை ஆளக்கூடிய பாஜ அரசு கடந்த 2023ம் ஆண்டு ‘விஸ்வகர்மா திட்டம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. 18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் என்று சொன்னார்கள். நம்மை பொறுத்தவரைக்கும், எந்த திட்டமாக இருந்தாலும், அது சமூகநீதியை, சமத்துவத்தை நிலைநாட்டுகின்ற நோக்கத்துடன் இருக்க வேண்டும். ஆனால், அந்த விஸ்வகர்மா திட்டம், அப்படியான திட்டம் இல்லை. விண்ணப்பதாரர், அவருடைய குடும்பம் காலங்காலமாக செய்து கொண்டு வருகின்ற தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. இது சாதிய பாகுபாடுகளை, குலத்தொழில் முறையை வெளிப்படையாகவே ஊக்குவிக்கிறது என்று சொல்லி கடுமையாக எதிர்த்தோம். அதுமட்டுமல்ல, விண்ணப்பித்தவர்களுக்கான குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை பார்த்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் உண்டானது.

18 வயது என்பது ஒரு மாணவர் உயர்கல்விக்காக கல்லூரிக்கு செல்கின்ற வயதா, இல்லை, குடும்பத் தொழிலையே செய்யவேண்டும் என்று தள்ளிவிடுகின்ற வயதா? படிப்பை விட்டு வெளியே செல்கின்ற மாணவர்களையும் மீண்டும் கல்வி சாலைக்குள்ளே அழைத்துக் கொண்டு வருவதுதான் ஒரு அரசின் கடமையே தவிர, அவர்களை படிப்பை விட்டு வெளியேற்றுவதும், அதுவும் குடும்ப தொழிலையே செய்யவேண்டும் என்று சொல்வதும் கிடையாது. சாதிய வேறுபாடுகள் நிறைந்த இந்திய சமூகத்தில், இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். அந்த உணர்வோடுதான், தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த மூன்று முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதில், நான் குறிப்பிட்டது… முதல் மாற்றம்: விண்ணப்பதாரரின் குடும்பம் பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்கின்ற கட்டாய நிபந்தனையை நீக்கி, தகுதியான எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாற்றவேண்டும்.

இரண்டாவது மாற்றம்: விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 35ஆக உயர்த்த வேண்டும். மூன்றாவது மாற்றம்: கிராமப்புறங்களில், பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பை கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாற்றவேண்டும். ஆனால், மிக மிக முக்கியமான இந்த மூன்று மாறுதல்களையும் ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். அதனால்தான், பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்று ஒன்றியத்தில் இருக்கக்கூடிய எம்எஸ்எம்இ துறையின் அமைச்சருக்கு எழுத்துப்பூர்வமாகவே இதை நாங்கள் தெரிவித்துவிட்டோம். அதே நேரத்தில், கைவினைக் கலைஞர்களுடைய வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதற்காக, சாதிய அடிப்படையில், பாகுபாடு காட்டாத ஒரு திட்டத்தை உருவாக்க முடிவு செய்தோம். அதன்படி உருவானதுதான் இந்த கலைஞர் கைவினைத் திட்டம்.

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தில், 18 தொழில்கள்தான் இருக்கிறது. ஆனால், கலைஞர் கைவினைத் திட்டத்தில் 25 வகையான தொழில்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு திட்டத்தில், விண்ணப்பதாரர் அவருடைய குடும்பத் தொழிலை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், நம்முடைய திட்டத்தில் விரும்பிய எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 35ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறோம். இந்த திட்டத்தில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. விஸ்வகர்மா திட்டத்தில் மானியம் கிடையாது. இதுவரை 24 ஆயிரத்து 907 விண்ணப்பங்கள் வந்திருக்கிறது. வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 8,951 பயனாளிகளுக்கு ரூ.170 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் கைவினைத் திட்டமானது தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை கைவினை கலைஞர்களுக்கும் அதிகாரம் அளிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

யாரையும் விலக்காமல், சமூக பாகுபாடு பார்க்காமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமான கைவினைஞர்கள், விரும்பிய தொழிலை செய்யலாம் என்கின்ற அடிப்படையில்தான் இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எம்எஸ்எம்இ நிறுவனங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வளர்த்தெடுத்திருக்கிறார். அவை பெருந்தொழில்களுக்கு துணையாக இருந்து நாட்டின் ’இன்க்ளூசிவ்’ மற்றும் ‘ஆல்-ரவுண்ட்’ சமூக வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிக்கிறது. உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதால், மக்கள் வேலை தேடி தொலைதூரங்களுக்கு இடம் பெயர்வது பெருமளவு தடுக்கப்படுகிறது. கலைஞர் கைவினைத் திட்டத்தில் சேர்ந்து, நிதியுதவி பெற்று தொழில் தொடங்கும் பயனாளிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்எல்ஏக்கள் இ.கருணநிதி, எஸ்.ஆர்.ராஜா, எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

25 வகை தொழில்கள் செய்ய ரூ.3 லட்சம் வரை கடனுதவி
‘கலைஞர் கைவினைத் திட்டம்’ மூலம், மரவேலைகள், படகு தயாரித்தல், உலோக வேலை, மண்பாண்டம், கூரை முடைதல், கட்டிட வேலை, கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், பொம்மை தயாரிப்பு, மலர் வேலை, தையல் வேலை, நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல், துணி தேய்த்தல், இசைக்கருவிகள் தயாரித்தல், துணி கலைவேலைபாடுகள், பாசிமணி வேலைப்பாடு, பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல், வர்ணம் பூசுதல் உள்பட 25 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்
கலைஞர் கைவினைத் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகள வெளியிட்டார். அது வருமாறு:
1 அறிவுசார் சொத்துரிமையான ‘புவிசார் குறியீடு’ பெறுவதற்காக வழங்கப்பட்டு வரும் மானியம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
2 அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும், வாகன மற்றும் பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அளவியல் மற்றும் உலோகவியல் ஆய்வகங்கள் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும்.
3 தொழில் நிறுவனங்கள் மிகுதியாக இருக்கின்ற காஞ்சிபுரம் பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
4 காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் மற்றும் இயந்திர தளவாடங்கள் கூடிய பொது வசதி மையம் ரூ.3 கோடியே 90 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.
5 குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்க வழங்கப்படும் காட்சிக்கூட கட்டணத்துக்கான நிதியுதவி, ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi