ராய்ப்பூர்: சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் விரும்புகிறது என்று ரெய்கார் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். பீகார் மாநிலத்தில் முதன் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை நிதிஷ் குமார் தலைமையிலான அரசு வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. அதன் தரவுகள் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டு, தேசிய அளவில் அது தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசை அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இதைப்போல கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் இதுகுறித்து நேற்று விரிவாக பேசினார். சட்டீஷ்கரின் ரெய்கார் மாவட்டத்தில் நடந்த மாநில அரசின் நம்பிக்கை மாநாட்டில் கார்கே உரையாற்றினார். அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாகவும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா தொடர்பாகவும் ஒன்றிய அரசை கடுமையாக சாடினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் எதிர்ப்பதாக பாஜ கூறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. ஜனசங்கமாக இருந்தாலும் சரி, பாஜ அல்லது ஆர்எஸ்எஸ்.சாக இருந்தாலும் சரி, அவர்கள்தான் பெண்களுக்கு எதிரானவர்கள். பெண்கள் முன்னேறுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் ஏழைகள் மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இப்போதே அமல்படுத்த வேண்டும். ஆனால் தற்போதைய மசோதாபடி 2034க்கு முன் அமல்படுத்த முடியாது.
பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் கணக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் அவர்களில் எத்தனை பேர் மிகவும் பின்தங்கியவர்கள், கல்வியறிவு பெற்றவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் போன்ற தகவல்கள் வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பில் இந்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அதன்மூலமே அவர்கள் மேம்பாட்டுக்காக நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.
எனவேதான் பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆனால் பிரதமர் மோடியோ, நாட்டை பிளவுபடுத்தவும், பெண்களின் உரிமைகளை பறிக்கவும் விரும்புகிறார். மோடிஜி, மக்கள் தற்போது விழிப்புணர்வு அடைந்து விட்டனர். உங்கள் விளையாட்டெல்லாம் நீண்ட காலம் நீடிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.