பாட்னா: பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக இன்று முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பீகார் மாநில அரசு நேற்ற ஜாதி வாரி கணக்கெடுப்பின் விபரங்களை வெளியிட்டது. அந்த பட்டியலின் அடிப்படையில், மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் (13 கோடி பேர்) இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) 63 சதவீதம் பேரும், 19 சதவீதம் பேர் பட்டியலின வகுப்பினரும், பழங்குடியினர் 1.68 சதவீதம் பேரும், உயர் சாதியினர் அல்லது சவர்ணாக்கள் 15.52 சதவீதம் பேரும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று வெளியிடப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளவும், அது தொடர்பாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். பாஜக உள்ளிட்ட ஒன்பது கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், மக்களின் பொருளாதார நிலைமைகள் குறித்த விரிவான அறிக்கையை அரசு வெளியிட உள்ளது.
மேலும் அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளின் அடிப்படையில், மேற்கொண்டு இடஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் கூறினர். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதால், வரும் லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கட்சிகள் முன்வைத்துள்ளன. இவ்விவகாரத்தில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் மோதல்கள் இருந்து வருகிறது.