Monday, June 23, 2025
Home செய்திகள் பெரியாரின் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் யுபிஎஸ்சி தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத்தனமானது: திமுக மாணவர் அணி கடும் கண்டனம்

பெரியாரின் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் யுபிஎஸ்சி தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத்தனமானது: திமுக மாணவர் அணி கடும் கண்டனம்

by Arun Kumar

சென்னை: பெரியாரின் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளத்தை திணித்துள்ள ஒன்றிய அரசின் யுபிஎஸ்சி தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று திமுக மாணவர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பெயருக்குப் பின்னால் சாதியைப் பட்டமாகச் சூட்டிக்கொள்வது அடையாளமாகவும் பெருமிதமாகவும் இன்றளவிலும் இருக்கிறது. ஆனால் 1929ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், பெயருக்குப் பின்னால் இருக்கும் சாதிப் பட்டத்தை நீக்குவதாக அறிவித்தார் தந்தை பெரியார். அவரது ‘குடி அரசு’ இதழிலும் சாதிப் பட்டம் போடப்படுவது நிறுத்தப்பட்டது.

அவரைப் பின்பற்றி, கடந்த ஒரு நூற்றாண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தை சூட்டிக்கொள்வதை அவமானமாகக் கருதி விட்டொழித்துவிட்டது. சாதியை அவமானமாக, இழிவாகக் கருதிய பெரியாரை, அவரது ஜாதியைச் சொல்லி அழைப்பதை மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் செய்வதை சிலர் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர் இப்போதும். பெரியார் சிலைக்கு காவி பூசி அவமதிப்பதைப்போல, பெரியாருக்கு சாதிப் பட்டம் பயன்படுத்தினாலும் அவமதிப்பது போலத்தான் என்றே இதைச் செய்கிறார்கள்.

ஆனால் நேற்று நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் பெரியாரின் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளம் திணிக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. தனி நபர்களோ அல்லது அரசியல் இயக்கமோ பெரியாரைத் தூற்றுவது வேறு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யு.பி.எஸ்.சி. தேர்வாணையம் இத்தகைய செயலில் ஈடுபடுவது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இதற்குமுன்பும் இதே தவறை யு.பி.எஸ்.சி. செய்தபோதும் கண்டனங்கள் எழுந்தன.

மீண்டும் மீண்டும் இதைச் செய்வது தன்னிச்சையாகவோ அறியாமையிலோ நடப்பதாகத் தெரியவில்லை. சாதி ஒழிப்புக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட அய்யாவை, மீண்டும் மீண்டும் சாதிய வட்டத்திற்குள் அடக்க முயலும் ஒன்றிய அரசின் யுபிஎஸ்சி தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi