Sunday, June 22, 2025
Home செய்திகள்இந்தியா மேனேஜரை தாக்கிய நடிகர் உண்ணி முகுந்தன் மீது வழக்குப்பதிவு: கேரளாவில் பரபரப்பு

மேனேஜரை தாக்கிய நடிகர் உண்ணி முகுந்தன் மீது வழக்குப்பதிவு: கேரளாவில் பரபரப்பு

by Neethimaan

திருவனந்தபுரம்: டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்டை படத்தை இன்ஸ்டாகிராமில் பாராட்டியதால் ஆத்திரம் அடைந்த நடிகர் உண்ணி முகுந்தன், தன்னை தாக்கியதாக கூறி அவரது மேனேஜர் விபின்குமார் அளித்த புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உண்ணி முகுந்தன். அவர் நடித்து வெளியான மார்க்கோ படம் மலையாளம், இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் ஆக ஓடியது. சீடன் என்ற தமிழ் படத்தில் தான் உண்ணி முகுந்தன் முதன்முதலாக அறிமுகமானார். சமீபத்தில் தமிழில் வெளியான கருடன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் நடிகர் உண்ணி முகுந்தனின் மேனேஜர் விபின்குமார் கொச்சி இன்ஃபோபார்க் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பது: நான் கடந்த 18 வருடங்களாக சினிமாவில் உள்ளேன்.

நடிகர் உண்ணி முகுந்தனிடம் 6 வருடங்களாக மேனேஜராக பணிபுரிந்து வருகிறேன். அவர் சமீப காலமாக கடும் மன உளைச்சலில் உள்ளார். மார்க்கோ படத்திற்கு பிறகு எந்தப் படமும் சரியாக ஓடவில்லை. அவர் இயக்க தீர்மானித்திருந்த ஒரு படத்தில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகி விட்டது. புதிய படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இந்த காரணங்களால் ஏற்பட்ட ஆத்திரத்தை தன்னுடன் இருப்பவர்களிடம் தீர்த்துக் கொள்கிறார். இன்று (நேற்று) கொச்சியில் உள்ள என்னுடைய பிளாட்டுக்கு வந்து என்னை தாக்கினார். வேறு ஒரு நடிகர் எனக்கு தந்த கூலிங் கிளாசை காலில் போட்டு மிதித்து நொறுக்கினார். டொவினோ தாமஸ் நடித்த நரிவேட்டை படத்தை நான் இன்ஸ்டாகிராமில் பாராட்டியிருந்தேன். இதுதான் உண்ணி முகுந்தனின் ஆத்திரத்திற்கு காரணமாகும். ஆகவே என்னை தாக்கியது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விபின்குமார் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் உண்ணி முகுந்தன் மீது இன்ஃபோபார்க் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உண்ணி முகுந்தன் தன்னை தாக்கியது குறித்து விபின்குமார் மலையாள நடிகர்கள் சங்கம், தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்திடமும் புகார் கொடுத்துள்ளார். தனக்கு மேலும் பல முக்கிய விஷயங்கள் குறித்து கூற வேண்டியது இருக்கிறது என்றும், விரைவில் அந்தத் தகவல்களை வெளியிடுவேன் என்றும் கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi