சென்னை: நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா மீது மறைந்த சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராகாசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கஸ்தூரி ராஜாவை விடுதலை செய்து 2015ல் தீர்ப்பளித்தது. இந்நிலையில், கடன் பெறும்போது அளித்த வெற்று காசோலையை தவறாக பயன்படுத்தியதாக முகுந்த் சந்த் போத்ராவுக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரி ராஜா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதைடுத்து, தங்களுக்கு எதிராக பொய் வழக்கு தொடர்ந்தாக குற்றம் சாட்டி இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிராக முகுந்த் சந்த் போத்ராவின் மகன் ககன் போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை ரத்து செய்யக் கோரி, இயக்குனர் கஸ்தூரி ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, இயக்குனர் கஸ்தூரி ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜா முகைதீன் கிஸ்தி, நீதிமன்ற அதிகாரி தான் வழக்கு தொடர முடியும். தனி நபர் நேரடியாக வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கஸ்தூரி ராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.