சென்னை: சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவம் செய்யும் டாக்டர்கள் அலோபதி மருத்துவ சிகிச்சையை வழங்கலாம் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இந்திய டாக்டர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ். வி. கங்காபுர்வாலா, நீதிபதி டி .பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்திய டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் டேவிட், அரசாணையை எதிர்க்கும் மனுதாரர் தரப்பு கூறும் காரணத்தை் தனி நீதிபதி கேட்கவில்லை. எனவே, தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்கிறோம். வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி தனி நீதிபதிக்கு அனுப்பி வைக்கிறோம் என உத்தரவிட்டனர்.