மும்பை: ராஜ்யசபா எம்பியும், சிவசேனா (உத்தவ் அணி) செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட பதிவில், ‘மகாராஷ்டிராவில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டும். மாநில அரசின் சட்டவிரோத உத்தரவுகளை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பின்பற்ற வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து நாசிக் காவல்துறையினர் தானாக முன்வந்து சஞ்சய் ராவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சஞ்சய் ராவத் இன்று வெளியிட்ட பதில், ‘முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எதிர்காலத்தில் சட்டரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால், மாநில அரசின் சில உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என்று எனது கருத்தை தெரிவித்திருந்தேன். இது கூட குற்றமா?’ என்று கூறினார்.