ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் பாஜக தலைவராக இருந்த கதிரவன் பதவி பறிக்கப்பட்டு, மாவட்டப் பொருளாளராக இருந்த தரணி முருகேசன் புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் இரு தரப்பிற்கும் கோஷ்டிபூசல் நடந்து வருகிறது. இதில் கதிரவன் தூண்டுதலின் பேரில், கடந்த 16ம் தேதி கூலிப்படையை சேர்ந்த 2 பேர் தரணி முருகேசனை கொலை செய்ய அவரது வீட்டிற்கு அரிவாளுடன் வந்தனர். கட்சியினர் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கூலிப்படையினர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கதிரவன் உள்பட 2 பேர் தலைமறைவாக உள்ளனர். கூலிப்படையினர் தாக்கியதில் காயமடைந்த தரணி முருகேசன் தரப்பை சேர்ந்த கணேசன், ராமநாதபுரம் ஜிஹெச்சில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குணமடைந்த கணேசனை டிஸ்சார்ஜ் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையில் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் ஜிஹெச் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தரணி முருகேசன் உள்பட 25 பேர் மீது நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.