Saturday, July 19, 2025
Home செய்திகள் தண்ணீருக்கே தட்டுப்பாடு… ஆனாலும் அம்சமாக விளையுது கேரட்டும், பீட்ரூட்டும்!

தண்ணீருக்கே தட்டுப்பாடு… ஆனாலும் அம்சமாக விளையுது கேரட்டும், பீட்ரூட்டும்!

by Porselvi

தர்மபுரியில் இருந்து ஒக்கேனக்கல் செல்லும் சாலையில் 12 கி.மீ தொலைவில் இருக்கிறது சின்னகாம்பட்டி எனும் அழகிய கிராமம். போதுமான தண்ணீர் வசதி இல்லாதபோதும், இருக்கும் நீரைக்கொண்டு என்ன விவசாயம் செய்ய முடியுமோ அதனை செய்து வருகிறார்கள் இங்குள்ள விவசாயிகள். காய்கறிப்பயிர்கள் முதல் பல வகையான கிழங்குகள் வரை சாகுபடி செய்து வருவது ஒருபக்கம் இருக்க, இந்த கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்னும் விவசாயி மலைப்பிரதேசப் பயிர்களான கேரட், பீட்ரூட்டை இயற்கை முறையில் சாகுபடி செய்து அசத்தலான வருமானம் பார்த்துவருகிறார். மேலும் பல காய்கறிப் பயிர்களைச் சுழற்சி முறையில் விளைவித்து அறுவடை எடுக்கிறார். இவரது விவசாய முறைகளை அறிந்துகொள்ள சின்னகாம்பட்டிக்குச் சென்றோம். கேரட் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த லோகநாதன் மகிழ்வோடு நம்மை வரவேற்றுப் பேசினார். “எங்களுக்குச் சொந்தமாக 2.5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அப்பா காலத்தில் தானியப் பயிர்கள்தான் அதிகமாக சாகுபடி செய்யப்படும். சிறு வயதில் அவரோடு வயலுக்குச் சென்று சில வேலைகளைச் செய்வேன். வயல் வேலைகளுக்கு இடையே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடித்தேன். பின்பு ஒரு தனியார் கம்பெனியில் 20 வருடம் வேலை பார்த்தேன். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே விவசாயமும் செய்துவந்தேன். கொரோனா காலத்தில் வேலை பறிபோனதால் முழுநேர விவசாயத்தில் இறங்கிவிட்டேன்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

“எங்கள் பகுதியில் தண்ணீர் வளம் குறைவாகத்தான் இருக்கிறது. அதைக் கொண்டு இங்குள்ள விவசாயிகள் கிழங்கு வகை பயிர்களையே அதிகமாக பயிரிடுகிறார்கள். நானும் அந்த வகையில் மரவள்ளி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சக்கரைவள்ளிக்கிழங்கு என பல கிழங்குகளைப் பயிரிடுகிறேன். இந்தக் கிழங்குகளோடு சேர்த்து அரை ஏக்கரில் கேரட் மற்றும் பீட்ரூட் சாகுபடி செய்துவருகிறேன். தர்மபுரியில் சில இடங்களில் கேரட், பீட்ரூட் விவசாயம் செய்துவருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ரசாயனங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்கிறார்கள். நான் இந்த இரண்டு பயிர்களையும் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கிறேன். அதுவும் சுழற்சிமுறை விவசாயத்தைக் கையாண்டு விளைச்சல் எடுக்கிறேன். அதாவது, அரை ஏக்கரில் முதல் பத்து சென்டில் கேரட், பீட்ரூட் விதைகளைக் கலந்து விதைப்பேன். இதே முறையில் ஒரு வாரம் இடைவெளியில் அடுத்த பத்து சென்டில் மீண்டும் கேரட், பீட்ரூட் விதைப்பேன். இப்படி அரை ஏக்கரில் வெவ்வேறு நாட்களில் பயிரிடுவேன். அப்படி விதைத்தால்தான் அனைத்துக் காய்கறிகளும் ஒரே நேரத்தில் அறுவடைக்கு வராமல் இருக்கும்.

கேரட், பீட்ரூட் சாகுபடியைப் பொருத்தவரை விதைப்பதற்கு முன்பு நிலத்தை நன்றாக தயார்படுத்த வேண்டும். அதனால், நான் நிலத்தை மூன்று முறை நன்றாக உழுதேன். முதல் உழவின்போது ஆழமாகவும், அடுத்த உழவில் சமமாகவும், அதன்பின் தொழுஉரமிட்டும் நன்றாக உழுவேன். கடைசி உழவின்போது ரொட்டோவேட்டர் மூலம் நிலத்தை சமப்படுத்தி விதைகளை விதைக்கத் தொடங்கலாம். கேரட், பீட்ரூட் விதைகளை விதைக்கும்போது நிலத்தில் நீர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர் இருக்கும்போது விதைத்தால் விதைகள் தண்ணீரில் மிதக்க ஆரம்பித்துவிடும். எனது நிலத்தில் கேரட், பீட்ரூட் விதைகளை அரை அடி இடைவெளியில் விதைத்திருக்கிறேன். விதைத்தப் பிறகும்கூட அதிகமாக தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் கொடுப்பதே போதுமானது. அப்படி தண்ணீர் கொடுக்கும்போது இலைகளிலும் தண்ணீர் படுவதால் நல்ல முறையில் கேரட் வளரும்.

கேரட், பீட்ரூட் இரண்டிற்குமே ஒரே மாதிரியான விவசாய முறைதான். எப்போது விதைக்கிறோமோ அப்போதிருந்து நான்காம் நாளில் நாற்று வளரத் தொடங்கிவிடும். இவை இரண்டுமே 90 நாள் பயிராக இருந்தாலும், நாம் 60 நாட்களில் இருந்தே அறுவடை செய்யத் தொடங்கலாம். செடி நன்றாக வளர்வதற்கும் பூச்சிகள் தாக்காமல் இருக்கவும் பஞ்சகவ்யம் மற்றும் தேமோர் கரைசல்களை நானே தயாரித்து பயன்படுத்துகிறேன். மீன் கரைசலை மட்டும் வெளியில் இருந்து வாங்கிப் பயன்படுத்துகிறேன். சரியாக, 60 நாட்களில் இருந்து கேரட், முள்ளங்கி அறுவடையைத் தொடங்கிவிடுவேன். அதாவது, எனது தோட்டத்தில் விளையும் பொருட்களை நான் வியாபாரிகளுக்கு கொடுப்பது கிடையாது. நேரடியாக நானே சந்தையில் வைத்து விற்பனை செய்கிறேன். அதனால், எனது தோட்டத்தில் விளையும் அனைத்துப் பொருட்களையும் வாரம் ஒருமுறை அறுவடை செய்து நானே சந்தைக்கு எடுத்துச் செல்வேன். அதன்படி கேரட், பீட்ரூட், மரவள்ளி, கருணைக்கிழங்கு, கருங்கொய்யா போன்ற பல பயிர்களை சிறிது சிறிதாக அறுவடை செய்து நானே விற்பனை செய்துவிடுகிறேன்.

சராசரரியாக பார்த்தால் வாரம் ஒருமுறை அனைத்துக் காய்கறிகளிலும்
15 கிலோ மட்டும் அறுவடை செய்து மொத்தம் 70 முதல் 80 கிலோ காய்கறிகளை சந்தைக்கு எடுத்துச் செல்வேன். இந்த முறையில் நான் நேரடியாக விற்பனை செய்வதால் நல்ல வருமானமும் கிடைக்கிறது. இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் என்பதால் ஒரு கிலோ கேரட், பீட்ரூட் ரூ.50க்கு விற்பனை செய்கிறேன். இதன்படி, வாராவாரம் ரூ.8000 வரை வருமானம் கிடைக்கிறது. அதாவது, விவசாயத்தில் நிறைய வருமானம் பார்ப்பது ஒரு பக்கம். நிலையான வருமானம் பார்ப்பது ஒரு பக்கம். நான் நிலையான வருமானத்திற்காக விவசாயம் பார்க்கிறேன். ஒரு கம்பெனியில் வேலைக்குச் சென்றால் மாதம் எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ அதனை நானே எனது விவசாயத்தின் மூலம் சம்பாதித்துக்கொள்கிறேன். அதுவும் இயற்கை முறையில் விளைவித்த பொருட்களை மக்களுக்கு வழங்குகிறேன் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி பெறுகிறேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
லோகநாதன்: 99447 76690.

கேரட், பீட்ரூட் விதைப்பதற்கு முன்பு நிலத்தில் வேப்பம்புண்ணாக்கு அல்லது வேம்பில் இருந்து கிடைக்கும் ஏதாவது ஒரு உரத்தை நிலத்தில் தூவி உழுவது நல்ல பலன் கொடுக்கும். அவ்வாறு உழுவதன் மூலம், கேரட் பயிரில் ஏற்படும் வேர் சம்பந்தமான நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.

தர்மபுரியில் இயற்கை உழவர்களுக்கென்று தமிழர் மரபுச்சந்தை என்ற சந்தை செயல்பட்டுவருகிறது. அந்தச் சந்தையில் இயற்கை உழவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. இயற்கை முறையில் விளைந்த விளைபொருட்களை மட்டும் இந்தச் சந்தையில் விற்கமுடியும். இந்தச் சந்தையில்தான் லோகநாதன் தனது விளைபொருட்களை விற்பனை செய்கிறார்.

தமிழர் மரபுச்சந்தையில் சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அங்கு விற்பனைக்காக வந்த பொருட்கள் விற்பனை ஆகாமல் இருந்தால், கடை போட்டிருக்கும் மற்ற விவசாயிகள் அந்தப் பொருட்களை தங்களது வீட்டுத் தேவைகளுக்காக வாங்கிச் செல்கிறார்கள். அதேபோல் தங்களுக்குத் தேவையான விதைகளையும், உரங்களையும் இந்த சந்தையிலேயே வாங்கிக்கொள்கிறார்கள். பின்னர் விளைபொருட்களையும் அங்கேயே விற்றுவிடுகிறார்கள்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi