*போட்டி போட்டு அள்ளிய குடிமகன்கள்
திருமலை : ஆந்திர மாநிலத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையில் சிதறிய பீர்பாட்டில்களை குடிமகன்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மதுபான குடோனில் இருந்து நரசிப்பட்டினத்திற்கு பீர் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் நேற்று சென்று கொண்டிருந்தது. கசீம்கோட்ட அடுத்த பையவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வேனின் குறுக்கே இருசக்கர வாகனம் வந்துள்ளது.
இதனால் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்ப முயன்றுள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பீர் லோடு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த பீர் பாட்டில்கள் சாலையில் சிதறியது. சில பீர்பாட்டில்கள் உடைந்து சேதமடைந்தது.
இதனை கண்ட அங்கிருந்த குடிமகன்கள் சாலையில் சிதறிய பீர்பாட்டில்களை போட்டி போட்டு அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கிடைத்த வரையில் லாபம் என் எண்ணி குடிமகன்கள் பீர்பாட்டில்களை மகிழ்ச்சியுடன் எடுத்து சென்றனர். இச்சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.