திருத்தணி: திருவள்ளூர் பகுதியில் இருந்து அரசுப் பேருந்து தடம் எண் 105 சி நேற்று மாலை 5 மணியளவில் புறப்பட்டு திருவலாங்காடு வழியாக அரக்கோணம் நோக்கிச் சென்றது. இந்த பேருந்து நாகாளம்மன் கோயில் அருகே சென்றபோது அரக்கோணத்தில் இருந்து திருத்தணி நோக்கி வந்த கார் ஒன்று பஸ் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த திருத்தணி செங்கல்வராயன் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சரவணன்(34), திருத்தணி ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் பரமசிவம்(28), திருத்தணி காந்தி சாலையைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் மகன் திருமலை(27) மற்றும் பிரபாகரன் என்பவரின் மகன் குமார்(30) ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் திருத்தணியில் இருந்து காரில் புறப்பட்டு அரக்கோணம் வழியாக திருவலாங்காடு நோக்கிச் சென்றபோது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் திருவலாங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப் இன்ஸ்பெக்டர் நாகபூஷனம், காவலர்கள் சுரேஷ், வருண் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் காரில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.