Tuesday, July 15, 2025
Home செய்திகள்Showinpage 269 ரன் விளாசி புதிய சாதனை; கேப்டன்சி அழுத்தம் கில்லின் பேட்டிங்கை பாதிக்கவில்லை: ரவீந்திர ஜடேஜா பேட்டி

269 ரன் விளாசி புதிய சாதனை; கேப்டன்சி அழுத்தம் கில்லின் பேட்டிங்கை பாதிக்கவில்லை: ரவீந்திர ஜடேஜா பேட்டி

by Suresh

பர்மிங்காம்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபியில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்ற நிலையில் 2வது டெஸ்ட் பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாளில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன் எடுத்தது. 2வது நாளான நேற்று ஜடேஜா 89, வாஷிங்டன் சுந்தர் 42 ரன்னில் அவுட்ஆக கேப்டன் சுப்மன்கில் இரட்டை சதம் விளாசினார். இதன் மூலம் தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய சேனா நாடுகளில் இரட்டை சதம் அடித்த ஆசிய அணிகளின் கேப்டன் என்ற சாதனையை சுப்மன்கில் படைத்தார். அவர் 269 ரன்னில் அவுட் ஆனார். முதல் இன்னிங்சில் இந்தியா 151.1 ஓவரில் 587 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து பவுலிங்கில் சோயிப் பஷிர் 3, ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், ஒல்லிபோப் ஆகியோர் ஆகாஷ் தீப் பந்தில் அடுத்தடுத்த பந்தில் டக்அவுட் ஆகினர். ஜாக் கிராலி 19 ரன்னில் சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். 25 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஜோ ரூட்(18 ரன்), ஹாரி புரூக் (30 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். நேற்றைய 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன் எடுத்திருந்தது. இதனிடையே நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாகூறியதாவது: நான் களம் இறங்கியபோது பந்து புதியதாக இருந்ததால் பொறுமையாக பேட்டிங் செய்ய வேண்டும் என நினைத்தேன். புதிய பந்தை விளையாட முடிந்தால், மீதமுள்ள இன்னிங்ஸ் எளிதாகிவிடும் என்று உணர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக மதிய உணவு இடைவேளை வரை நான் பேட்டிங் செய்ய முடிந்தது.

பின்னர் வாஷிங்டன் சுந்தரும், கில்லுடன் `தில்லாக’ பேட்டிங் செய்தார். இங்கிலாந்தில் எவ்வளவு அதிகமாக பேட் செய்கிறீர்களோ, அவ்வளவு சிறந்தது. அணிக்காக பேட்டிங் மூலம் பங்களிப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. 5 விக்கெட்டுக்கு 210 ரன்களில் இருந்து அணியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை ஒன்றாக இணைப்பது ஒரு சவாலாகும். நான் அதை சவாலாக எடுத்துக்கொண்டேன். கேப்டனுடன் இணைந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பை ஒன்றாக இணைக்க முடிந்தால், அது ஒரு கிரிக்கெட் வீரராகவும், பேட்ஸ்மேனாகவும் நம்பிக்கையை அளிக்கும். வரவிருக்கும் போட்டிகளிலும் என்னால் பேட்டில் பங்களிக்க முடியும். கில் அருமையாக பேட் செய்தார். கேப்டன்சி அழுத்தம் அவரது பேட்டிங்கை பாதிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi