டொரான்டோ: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய உளவு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் இந்திய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேற கனடா உத்தரவிட்டது. இந்தியா ட்ரூடோவின் குற்றச்சாட்டில் உள்நோக்கம் உள்ளதாக கூறி அதை நிராகரித்தே வந்தது. அத்துடன் கனடா தூதரக உயரதிகாரியை வெளியேறவும் உத்தரவிட்டது. கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதையும் நிறுத்தியது. கனடா இந்தியாவில் உள்ள 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.
இது பற்றி கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், ‘கனடா தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களை பாதுகாப்பாக திரும்ப பெறுவது எங்கள் பொறுப்பு. சண்டிகர், மும்பை, பெங்களூரு ஆகிய துணை தூதரகங்களிலும் எங்கள் சேவைகளை நிறுத்த வேண்டியது துரதிர்ஷ்டமாகும். 41 தூதரக அதிகாரிகளையும், அவர்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக திரும்ப பெற்றுக்கொண்டோம்’ என்று தெரிவித்தார்.