Sunday, June 15, 2025
Home செய்திகள்Showinpage 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி

20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளில் பிரசாரம் இன்று ஓய்கிறது: ராகுல், ராஜ்நாத், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போட்டி

by Ranjith

புதுடெல்லி: ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி, உமர் அப்துல்லா போன்ற பிரபலங்களின் தொகுதிகள் உட்பட 49 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடக்கிறது. இந்த தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை379 தொகுதிகளுக்கு 4 கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நாளை மறுநாள் (மே 20) 5ம் கட்டமாக 49 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்துடன் ஒடிசா மாநிலத்தில் 35 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. மேற்கண்ட 49 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில், உபியின் ரேபரேலியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , லக்னோவில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அமேதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி,பீகாரின் ஹாஜிபூரில் சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி),

பீகாரின் சரண் தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி (பாஜக); இவரை எதிர்த்து லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா (ஆர்ஜேடி), மகாராஷ்டிராவின் மும்பை வடக்கில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் (பாஜக), ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லாவில் உமர் அப்துல்லா (ஜேகேஎன்சி), மகாராஷ்டிராவின் கல்யாண் தொகுதியில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். ரேபரேலி, ராகுல் காந்தி போட்டியிடும் 2வது தொகுதி ஆகும்.

தற்போது எம்.பியாக உள்ள கேரளமாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி இந்த முறையில் களமிறங்கினார். அங்கு ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. பின்னர், உபியில் தனது தாய் சோனியாவின் தொகுதியான ரேபரேலியிலும் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
5ம் கட்ட தேர்தல் நடைபெறும் 49 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் கடைசி கட்ட பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். நாளை மறுநாள்(20ம் தேதி) இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 7 கட்டத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்படும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi