அண்ணாநகர்: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகன் (52). ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 27ம் தேதி சென்னை வடபழனியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுக்க வந்தார். புகைப்படம் எடுத்து முடிந்தும், மறுநாள் வேலூர் செல்ல கோயம்பேட்டுக்கு வந்து, வேலூர் பஸ்சில் ஏறினார். சிறிது நேரத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பு உள்ள அவரது கேமரா காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் மோகன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், சென்னையில் கொத்தனார் வேலை செய்து வரும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (39) என்பவர் கேமராவை திருடியது தெரிந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை கரூர் விரைந்து சென்று, சக்திவேலை கைது செய்தனர். பின்னர் கோயம்பேடு காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, அவரிடம் இருந்த கேமராவை பறிமுதல் செய்தனர். பிஅவரைன்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.