Sunday, September 24, 2023
Home » பெத்த மனசு பித்து பிள்ளை மனசு ‘கல்லுதான்’ சிகிச்சைக்காக அழைத்து வந்து தந்தையை கல்லால் தாக்கி கொன்ற மகன் தலைமறைவு

பெத்த மனசு பித்து பிள்ளை மனசு ‘கல்லுதான்’ சிகிச்சைக்காக அழைத்து வந்து தந்தையை கல்லால் தாக்கி கொன்ற மகன் தலைமறைவு

by Lakshmipathi

*சாலையோரம் வீசிச் சென்றவரை தேடி தனிப்படை போலீசார் கேரளா விரைவு

நெல்லை : சிகிச்சை பெறலாம் எனக்கூறி தந்தையை நெல்லை அழைத்து வந்து கல்லால் தாக்கி கொன்று சாலையில் வீசிச்சென்ற கல்நெஞ்சக்கார மகனை தேடி தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.நெல்லை வண்ணார்பேட்டை பைபாஸ் சாலை பஸ் ஸ்டாப் அருகே நேற்று முன்தினம் (6ம் தேதி) மாலை அடையாளம் தெரியாத முதியவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்து பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய்புரம் மீனாட்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (74). இவரது மகன் கடல்கண்ணி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். கடல்கண்ணி கேரள மாநிலம், கொட்டாரகரை பகுதியில் ஜவுளிகடை நடத்தி வருகிறார். தந்தை மாரிமுத்து ராஜபாளையம் தளவாய்புரம் மீனாட்சி கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் மாரிமுத்து ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு ராஜபாளையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக கடல்கண்ணி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

நெல்லை வண்ணார்பேட்டையில் பஸ்சில் இருந்து இறங்கிய மாரிமுத்துவை, உடன் வந்த அவரது மகன் கடல்கண்ணி தரதரவென இழுத்து சென்று சாலை ஓரத்தில் கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு அவர் கையில் வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு எவ்வித பரபரப்பும் இன்றி பஸ்சில் ஏறிச் சென்றது சிசிடிவி கேமரா காட்சிகளின் பதிவுகள் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாளை. போலீசார் தந்தையை கல்லால் தாக்கி கொலை செய்த மகன் கடல்கண்ணி மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி கடை நடத்தி வருவதால், அங்கு சென்றிருக்கலாம் எனக்கருதி பாளை. போலீசார் அவரை கைது செய்ய கொட்டாரக்கரைக்கு விரைந்துள்ளனர். சிகிச்சைக்காக தந்தையை நெல்லைக்கு அழைத்து வந்து கல்லால் அடித்து மகனே கொலை செய்ததுநெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?