பிஒய்டி நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட சீல் எலக்ட்ரிக் செடான் மற்றும் அட்டோ 3 எஸ்யுவி கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சீல் காரில் மேம்படுத்தப்பட்ட ஏசி சிஸ்டம், மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன்கள் இடம் பெற்றுள்ளன. இதில் டைனமிக், பிரீமியம், பர்பாமென்ஸ் என மூன்று வேரியண்ட்கள் இடம் பெற்றுள்ளன. டைனமிக்கில் 61.44 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் 510 கி.மீ தூரம் வரை செல்லும் என அராய் சான்றளித்துள்ளது. இதுபோல், பிரீமியம் மற்றும் பர்பாமென்ஸ் வேரியண்ட்களில் 82.56 கிலோவாட்அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் பிரீமியம் வேரியண்ட் 650 கி.மீ தூரமும், பர்பாமென்ஸ் 580 கி.மீ தூரமும் செல்லும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.
இதுபோல் அட்டோ 3 காரில் முழுமையான கருப்பு வண்ணத்தில் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட எல்பிஎப் பேட்டரி இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. இதில் டைனமிக், பிரீமியம் மற்றும் சுப்பீரியர் என 3 வேரியண்ட்கள் உள்ளன. டைனமிக்கில் 49.92 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செயய்தால் 468 கி.மீ தூரம் வரை செல்லும். பிரீமியம் மற்றும் சுப்பீரியர் வேரியண்ட்களில் 60.48 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. இது அதிகபட்சமாக 580 கி.மீ தூரம் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. பிஓய்டி அட்டோ காருக்கு முன்பதிவு செய்யும் முதல் 3,000 வாடிக்கையாளர்களுக்கு 2024 மாடல் காரின் விலையிலேயே விற்பனை செய்யப்படும் எனவும் இதன் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.24.99 லட்சம் எனவும் நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.