புதுடெல்லி: சர்வதேச பணக்காரர் எலான் மஸ்குடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். உலகின் மிக பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு கொடுத்தார். டிரம்பின் தேர்தல் செலவுகளுக்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்றதும் எலான் மஸ்குக்கு அரசாங்க திறன் துறை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வ துறை இல்லையென்றாலும் எலான் மஸ்குக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி எலான் மஸ்குடன் நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன்னில் நடந்த சந்திப்பின் போது நாங்கள் பேசிய விஷயங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து எலான் மஸ்க்கும் நானும் கலந்துரையாடினோம் தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.