சென்னை: மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில், பயணிகளிடம் டிக்கெட் வாங்க சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டும் என நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. பயணச்சீட்டிற்கு பயணிகள் அளிக்கும் பணத்தை பெற்று, உரிய மீதம் தொகையை வழங்க நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களை தவிர்த்து கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.