திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே மின் கம்பத்தில் மோதி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உட்பட 36 பயணிகள் உயிர் தப்பினர். கும்பகோணத்தில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 36 பயணிகளுடன் கோவை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ராபர்ட் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை திருப்பூர் அடுத்துள்ள பொங்கலூர் மின் பகிர்மான அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலை ஓர மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டிரைவர் 36 பயணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். இத்தகவலறிந்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்ததால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.
சிறு காயமடைந்த டிரைவருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தில் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விபத்தால் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் சுமார் 6 மணி நேரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வேறு பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.