
மும்பை: காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, மீண்டும் களமிறங்குவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையின்போது அணியில் இருந்து விலகினார் பும்ரா. அதன் பிறகு ஜனவரியில் இலங்கைக்கு எதிரான அணியில் இடம் பிடித்தார். ஆனாலும் காயம் குணமாகததால் அவர் விளையாடவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்காக களம் இறங்கவில்லை. இதற்கிடையில், நியூசிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பும்ராவுக்கு கீழ் முதுகில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதனால் 6 வார ஓய்வில் இருந்தவர், சமீபத்தில் நாடு திரும்பினார்.
தற்போது, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி (என்சிஏ) வளாகத்தில் தங்கியுள்ள பும்ரா, நேற்று உடல்திறன் மேம்பாடு, தகுதி பயிற்சிகளை தொடங்கியதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். முதுகுப் பகுதியில் காயம் அடைந்துள்ள ஷ்ரேயாஸ் அய்யருக்கு அடுத்த வாரம் நியூசிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அறுவைசிகிச்சை நடைபெற உள்ளது. அதற்காக அவர் நியூசி சென்றுள்ளார். 2 வார ஓய்வுக்குப் பிறகு நாடு திரும்பி என்சிஏவில் பயிற்சியை தொடங்குவார் என்றும் ஜெய் ஷா கூறியுள்ளார்.