புதுடெல்லி: ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பட்ஜெட் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அரசு கேட்டு வருகிறது. அந்த வகையில், பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறை சார் வல்லுநர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். 2047ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில் பட்ஜெட்டில் மேற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்து நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
இதில், மோர்கன் ஸ்டான்லியின் ரிதம் தேசாய், வேளாண் பொருளாதார நிபுணர் அசோக் குலாடி, சர்வதேச நிதியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சுர்ஜித் பல்லா, உள்ளிட்ட 15 நிபுணர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி பங்கேற்றனர்.


