புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி அவரது ஆண் நண்பரால் பொதுவெளியில் பலரது கண் முன்னே 22 முறை கத்தியால் குத்தி கொலை செய்து கல்லால் தாக்கிய சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளும் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. டெல்லி ஷாபாத் டைரி பகுதியில் நேற்று முன்தினம் 16 வயது சிறுமியை அவரது காதலன் 22 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தான். கொலை செய்யப்பட்ட சிறுமியும் 20 வயது வாலிபரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், அப்பெண் தனது நெருக்கமான நண்பரின் வீட்டில் நடந்த பிறந்த நாளுக்கு செல்லத்திட்டமிட்டு இருந்தார். அதன்படி, ஞாயிறன்று அப்பெண் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த அவரது காதலன் பெண்ணை வழிமறித்து பேசியுள்ளர். அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து குத்தி கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர வைத்துள்ளது. அந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளில், சிறிய சாலையில் சென்று கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை வழிமறித்து வாக்குவாதம் செய்கிறான். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென பெண்ணை குத்துகிறான் சுமார் 20க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்துகிறான்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை எட்டி பிடிக்கும் தூரத்தில் நின்றவாறு பலரும் பார்க்கின்றனர். ஆனால் ஒருவரும் தடுக்க முன்வரவில்லை. இதற்கிடையே, சிறிது தூரம் சென்ற அந்த காதலன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த பெண்ணின் அருகில் மீண்டும் வந்து கல்லை எடுத்து தலையில் கொடூரமாக தாக்குகிறான். அதன்பின் மிகவும் சர்வ சாதாரணமாக காதலியை கொலை செய்துவிட்டு எந்தவித பதற்றமும் இல்லாமல் அந்த வாலிபர் அங்கிருந்து நடந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலைத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், கொலை செய்த 20 வயதான அந்த வாலிபர் ஷாஹில் என்பது தெரிய வந்துள்ளது. ஏசி மொக்கானிக்காக உள்ள அந்த வாலிபர் கொலைக்கு பின் தலைமறைவானார். எனினும் துரிதமாக செயல்பட்ட டெல்லி போலீசார், உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் பதுங்கியிருந்த அவரை கைது செய்துள்ளனர்.