*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
குன்னூர் : குன்னூரில் பல்வேறு பகுதியில் விபத்துகளை தடுக்க அமைக்கப்பட்டுள்ள குவி கண்ணாடிகள் பல இடங்களில் உடைந்து சேதமானதை தொடர்ந்து, உடைந்த குவி கண்ணாடிகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஆபத்து நிறைந்த இடங்களை கண்டறிந்து, புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இதைத் தடுக்க, பல்வேறு இடங்களில் குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டது. தற்போது அந்த கண்ணாடிகள் மது பிரியர்களின் அட்டூழியங்களாலும், வன விலங்குகளாலும் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் வளைவுகளில் வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு தெரியாமல் இருந்து வருவதால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் தேவையான இடங்களில் கூடுதலாக புதிதாக குவி கண்ணாடிகள் அமைக்க வேண்டுமெனவும், சேதமடைந்த குவி கண்ணாடிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.