புதுடெல்லி: பாரத்நெட் திட்டத்தின் கீழ் பிராட்பேண்ட் இணைப்பு திட்டத்திற்கு ரூ.1.39லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் மாலை ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , நாட்டில் 6.4லட்சம் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஆப்டிகல் பைபர் அடிப்படையிலான பிராட் பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக ரூ.1.39லட்சம் கோடி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத்நெட் திட்டத்தின் கீழ் தற்போது வரை சுமார் 1.94லட்சம் கிராமங்கள் பிராட் பேண்ட் இணைப்பை பெற்றுள்ளன. மீதமுள்ள கிராமங்கள் இன்னும் இரண்டரை ஆண்டுகளில் பிராட்பேண்ட் இணைப்பை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிராம அளவிலான தொழில்முனைவோர் உடன் இணைந்து அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஒரு பிரிவான பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் மூலமாக இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கான சோதனை திட்டத்தில் 60ஆயிரம் கிராமங்களில் 3.51லட்சம் இணைப்புக்களை வழங்குவதற்கு 3800 தொழில்முனைவோர் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு மாதத்திற்கான இன்டர்நெட் நுகர்வானது ஒரு வீட்டிற்கு 175ஜிகாபைட் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோர் இடையே 50 சதவீத வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. மாதாந்திர பிராட் பேண்ட் திட்டமானது ரூ.399ல் இருந்து தொடங்குகின்றது. அரசின் இந்த திட்டத்தின் மூலமாக 2.5லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.