பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று, பிரிட்டன் இணை அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர்கள் நீல் ஸ்குப்ஸ்கி, ஜோ சாலிஸ்பரி இணை, அமெரிக்காவை சேர்ந்த இவான் கிங், கிறிஸ்டியன் ஹாரிசன் இணையுடன் மோதியது. முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக அவர்கள் கைப்பற்றினர். 3வது செட்டை பிரிட்டன் இணை கைப்பற்றியது. அதனால், 6-7 (5-7), 6-3, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்ற அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
மகளிர் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனை அலெக்சாண்ட்ரா க்ருனிக், கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினா இணை, நார்வேயை சேர்ந்த உல்ரிக்கே பியா ஐக்கேரி, ஜப்பானின் எரி ஹோஸுமி இணையுடன் மோதியது. முதல் செட்டை உல்ரிக்கே இணை 7-6 (7-5) என்ற செட் கணக்கில் டைபிரேக்கரில் கைப்பற்றியது. 2வது செட், க்ருனிக் இணை வசம், 6-3 என்ற கணக்கில் சென்றது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட்டில் இரு இணைகளும் சளைக்காமல் ஆடினர். கடைசியில், அந்த செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றிய க்ருனிக் இணை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.