நெல்லை: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், செங்கல் சூளை தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் பாலிடெக்னிக் மாணவரை கைது செய்தனர்.
நெல்லை, வள்ளியூரை அடுத்த பழவூர், செட்டிகுளத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (35). செங்கல் சூளை தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவரான ரெஜிமென்ட் (19) என்பவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணத்தை வாங்குவதற்காக நேற்று முன்தினம் காலை சந்தனகுமாரின் வீட்டிற்கு ரெஜிமென்ட் சென்றுள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சந்தனகுமார் அரிவாளால் ரெஜிமென்டை வெட்ட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெஜிமென்ட், சந்தனகுமாரின் கையில் இருந்து அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தனகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பழவூர் போலீசார், பாலிடெக்னிக் மாணவர் ரெஜிமென்டை கைது செய்தனர்.