சேலம்:சேலம் மாவட்டம், தாரமங்கலம் பதிவாளர் அலுவலகத்தில், கடந்த ஆண்டு சார்பதிவாளராக பணியாற்றியவர் அல்லாபகஷ். (இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார்). இவர் மீது தாரமங்கலம் அருகே பழக்காரனூரைச் சேர்ந்த சின்னண்ணன்(55) என்பவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அரூர்பட்டி கிராமத்தில் உள்ள பூர்வீக நிலத்தின் ஒரு பகுதியை, எனது மகள் கலைவாணி பெயரில் பத்திர பதிவு செய்தேன்.
இதற்காக புரோக்கர் சபரிநாதன் மூலமாக, சார்பதிவாளர் ரூ.1.50 லட்சம் கேட்டார். அந்த பணமும் கொடுக்கப்பட்டது. இதற்கான அசல் பத்திரத்தை கேட்ட போது, மேலும் ரூ.50 ஆயிரம் கேட்டு தர மறுத்து விட்டார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இதையடுத்து சார்பதிவாளர் அல்லாபகஷ், புரோக்கர் சபரிநாதன் ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, சார் பதிவாளர் அல்லாபகஷ், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்த சார் பதிவாளர் அல்லாபகஷை, நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.