கூடலூர்: தேனி மாவட்டம், கேரள எல்லைப் பகுதியில் உள்ள குமுளியில் இருந்து, திண்டுக்கல்லுக்கு நேற்று காலை 8 மணியளவில், சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. தேனியைச் சேர்ந்த பாண்டிசுந்தரம் பேருந்தை ஓட்டினார். நிலக்கோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் கண்டக்டராக இருந்தார். குமுளி மலைச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, வழிவிடும் மாதா கோயில் பகுதியில், வளைவுச் சாலையில் திடீரென பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக கூறப்படுகிறது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர், மலைச்சாலையின் தடுப்புச்சுவர் மீது பேருந்தை மோதி நிறுத்தினார்.
மலைப்பாதையில் குறுக்கே பேருந்து நின்று விட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மீட்புகுழுவினர் சுமார் 5 மணிநேரம் போராடி, பேருந்தை மீட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. பேருந்து மோதிய தடுப்புச்சுவருக்கு கீழே சுமார் 100 அடி பள்ளம் உள்ளது. இதில், பேருந்து கவிழ்ந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். டிரைவரின் சாமர்த்தியத்தால் 20க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பியதோடு, பேருந்தும் சேதமின்றி தப்பியது.