புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கிய பேரனை காப்பாற்ற முயன்ற முதியவர் உட்பட இருவர் இறந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே புதுநகரை சேர்ந்தவர் கணேசன் (85), விவசாயி. நேற்று காலை புதுநகர் அருகே மாத்திராம்பட்டியில் உள்ள தரை மட்ட கிணறு அருகே மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.
இவரது மருமகள் லட்சுமி நேற்று மதியம் 12 மணி அளவில் 8 வயது மகன் கோபாலுடன் அங்கு சென்றுள்ளார். கிணற்றின் அருகில் விளையாடிய சிறுவன் வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி தத்தளித்தான். தாய் லட்சுமி கூச்சலிடவே தாத்தா கணேசன் பேரனை காப்பாற்ற கிணற்றில் இறங்கினார். சிறிது நேரத்தில் தாத்தா, பேரன் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.