*சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான ஆர்கிட் மலர்களை வியப்புடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவுக்கு செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இது தவிர பூங்காவில் உள்ள மாடங்களிலும் அவ்வப்போது மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.
மேலும், பூங்காவில் மூன்று கண்ணாடி மாளிகைககள் உள்ளன. அதில், ஒரு கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரங்கள் மற்றும் பல்வேறு வகையான மலர்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.
கடந்த இரு மாதங்களாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் காணப்பட்டது.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். இந்நிலையில், மலர் கண்காட்சி முடிந்து 20 நாட்கள் ஆன நிலையில், பூங்காவில் இருந்த பெரும்பாலான மலர்கள் அழுகி உதிர்ந்து விட்டன. மேலும், மாடங்களில் வைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்களும் அகற்றப்பட்டு விட்டது.
தற்போது கண்ணாடி மாளிகையில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. கண்ணாடி மாளிகையில் தற்போது பல்வேறு வண்ணங்களை கொண்ட லில்லியம் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வகையான ஆர்கிட் மலர்களை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
சீசன் முடிந்த போதிலும், தற்போது ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு சென்று, அங்கு கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள லில்லியம் மற்றும் ஆர்கிட் மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
குறிப்பாக, அரிதாக காணப்படும் ஆர்கிட் மலர்கள் வடமாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும், அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.