ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஐந்து மாவட்டங்களில் எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் 8வது நாளாக நேற்று முன்தினமும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். ஜம்முவின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு வருகின்றது. 8வது நாளாக நேற்று முன்தினம் இரவு சிறிய ஆயுதங்கள் மூலமாக குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நவ்ஷோரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு முழுவதும் உள்ள நிலைகளில் இருந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவ வீரர்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர்.