புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் இல்லம் மற்றும் பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாகவே ஆளுநர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்பு துறை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதே போல் கடந்த 19ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் 2 மணி நேரமாக சோதனை நடத்தினர். அதன் பிறகு அது புரளி என தெரியவந்தது.
இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வீட்டிற்கு மீண்டும் 2வது முறையாக இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இத்தகைய தகவலை அடுத்து முதலமைச்சரின் பாதுகாவல் அதிகாரிகள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் முதலமைச்சர் இல்லத்திற்கு விரைந்த காவல் துறையினர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் வீடு முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புதுச்சேரி முதலமைச்சர் வீட்டிற்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மர்ம நபர்கள் தொடர்ந்து ஜிப்மர் உள்ளிட்ட அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.