கட்சித் தலைமையுடன் மோதல் நீடிக்கும் நிலையில் பாஜக எம்பியுடன் சசி தரூர் நெருக்கம் ஏன்?: கார்கேவை எதிர்த்ததால் ஓரம்கட்டப்படுகிறாரா?
புதுடெல்லி: கட்சித் தலைமையுடன் சசி தரூருக்கு மோதல் நீடிக்கும் நிலையில் பாஜக எம்பியுடனான சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கார்கேவை எதிர்த்ததால் சசி தரூர் ஓரம்கட்டப்படுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூருக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் கடந்த சில வாரங்களாகவே முட்டல் மோதல் இருந்து வருகிறது. சசி தரூரை பெரும்பாலும் கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான கருத்துக்களை வெளியிடுகிறார். சமீபத்தில், அவர் பிரதமர் மோடியையும், கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசையும் பாராட்டி பேசினார்.
இது கேரள காங்கிரசுக்கு அவமானமாக கருதப்பட்டது. மோடி-டிரம்ப் சந்திப்பு இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என்று சசி தரூர் கூறியது தேசிய தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதனால் அவர் விரைவில் பாஜகவில் இணையவுள்ளார் என்ற செய்தியும் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. கட்சியில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சசி தரூர் வெளிப்படையாக பேசி வருகிறார். அதனால்தான் அவர் கட்சியை விட்டு வெளியேற விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாஜக எம்பி ஜெய் பாண்டாவும், சசி தரூரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இருவரும் விமானத்தில் பயணித்த போது சந்தித்துக் கொண்டதாகவும், அதனால் சசி தரூர் பாஜகவில் இணைவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். கடந்த 2022ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்த போது, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து சசி தரூர் போட்டியிட்டு தோற்றார். அதன்பின் நடந்த மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ெவன்றார். தேசிய அளவிலான முக்கியப் பொறுப்புகள் வகிக்க சசிதரூர் விரும்புவதாகவும், ஆனால் கட்சித் தலைமை அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். கேரளாவில் ஆளும் இடது முன்னணியும், தேசியவாத காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளும் சசி தரூருடன் கைகோர்க்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


