Monday, June 23, 2025
Home செய்திகள்Showinpage பாஜவும் அதன் கொள்கைகளும் தேர்தலைக் கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை தமிழ்நாட்டுக்கு நன்மை விளைகின்ற அரசியலைத்தான் திமுக என்றும் செய்யும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

பாஜவும் அதன் கொள்கைகளும் தேர்தலைக் கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை தமிழ்நாட்டுக்கு நன்மை விளைகின்ற அரசியலைத்தான் திமுக என்றும் செய்யும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

by Karthik Yash

சென்னை: பாஜவும் அதன் கொள்கைகளும் தேர்தலைக் கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை என்றும் தமிழ்நாட்டுக்கு நன்மை விளைகின்ற அரசியலைத்தான் திமுக என்றுமே செய்யும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி:
* இந்த 4 ஆண்டுகளில் ஆளுநர் மாளிகைக்கும் தமிழ்நாடு அரசிற்குமான மோதல் முற்றியது. அதன் விளைவாக, உச்சநீதிமன்றம் சென்று 10 மசோதாக்களுக்கு உங்கள் அரசு ஒப்புதல் பெற்றது. அதன் பிறகு கூட, மோதல் முடிவு பெற்றதாக தெரியவில்லை. தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டு, தான் நடத்திய கூட்டத்தை புறக்கணிக்க வைக்கப்பட்டனர் என்று ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?

மக்களாட்சியை மதிக்காமல் செயல்படும் ஆளுநர், நீதிமன்ற தீர்ப்புகளையும் மதிக்காமல் செயல்படுவதையும் தன்னுடைய வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இதனால் பொதுமக்களும், கல்வியாளர்களும் அவரைப் புறக்கணிப்பதாக தோன்றுகிறது. இந்தப் புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாத அவர், அரசின் மீது கற்பனையான குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கிறார். கற்பனைக் கதைகளை எல்லாம், உண்மை என்று நம்பி செயல்படும் அவரது கற்பனைகளுக்கு நான் என்ன பதில் சொல்வது?

* ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் செல்வது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைப்பது மற்றும் மாநிலம்-ஒன்றியம் இடையேயான உறவுக்கு குறித்து ஆராய்வதற்கான குழு போன்ற முயற்சிகளின் மூலம் மாநில சுயாட்சியை தேர்தல் அஸ்திரமாக எடுக்கிறதா திமுக? இது மக்களிடம் எடுபடுமா?
தேர்தல் ஆதாயத்திற்காக எதையும் செய்பவன் அல்ல நான். மாநில சுயாட்சிக் கொள்கையை முன்வைத்துதான் நாங்கள் எல்லாத் தேர்தல்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, ஏதோ இந்தத் தேர்தலுக்காகதான் இந்த முன்னெடுப்புகளை எடுப்பதாக, இவற்றின் நோக்கங்களை திரித்து பரப்பிடும் சிலரது தீய எண்ணத்தை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

* பாஜ எதிர்ப்பு அரசியலை வைத்துதான் திமுக தேர்தல்களில் வெற்றி பெறுகிறது என்ற ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களை எடுத்து தங்கள் ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை மறைக்க பார்க்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. உங்கள் பதில் என்ன?.
பாஜவும் அதன் கொள்கைகளும் தேர்தலைக் கடந்து எதிர்க்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டுக்கும் – தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை விளைக்கின்ற அரசியலைத்தான் திமுக என்றும் செய்யும். அதற்குத் தடையாக உள்ளவர்களுக்கு எதிராக போராடும்.

* இருமொழி கொள்கையில் மாற்றம் ஏதும் இல்லை என்று நீங்கள் சட்டமன்றத்திலும் பொதுவெளியிலிலும் பல முறை கூறியுள்ளீர்கள். ஆனால், ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை நிலுவையில் வைத்துள்ளது. ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் இது போன்ற துறைகளில் மாநில அரசே அந்த நிதி சுமையை எத்தனை நாட்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியும்?
பள்ளிக்கல்வியில் மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று திணிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்காது. மூன்றாவது மொழி என்ற முகமூடியில் இந்தியை திணிப்பதும், மாணவர்களை கல்விச் சாலைகளில் இருந்து வெளியேற்றுவதற்காக தீட்டப்படும் திட்டங்களையும் நாம் இணைத்தேதான் பார்க்க வேண்டும். எனவேதான், இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். வளர்ச்சி அடைந்த ஒரு மாநிலத்தின் கல்விக்கான நிதியை குறைப்பது என்பது கழுத்தை நெரிப்பதற்குச் சமம். ஒன்றிய ஆட்சியாளர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மனச்சாட்சியோடு எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு அநீதி இழைப்பதை நிறுத்த வேண்டும்.

* தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் தேர்தல் களம் இப்பொழுதே குடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. அதிமுக மற்றும் பாஜ 19 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
இவர்கள் நேரடிக் கூட்டணியாகச் சேர்ந்து நின்றாலும், கள்ளக்கூட்டணியாகத் தனிதனியாக நின்றாலும் இவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித நன்மையும் இல்லை. ஏற்கனவே இது தோல்வி கூட்டணிதான். இந்த முறையும் மக்கள் நிராகரிப்பார்கள்.

* திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த மூன்று தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த முறை 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்குடன் தேர்தலை சந்திக்கவிருக்கிறீர்கள். இதே கூட்டணி நீடிக்குமா அல்லது பாமக மற்றும் தேமுதிக போன்ற காட்சிகள் இக்கூட்டணியில் இணைய வாய்ப்பிருக்கிறதா? 200 இடங்களில் வெற்றி என்பது நம்பிக்கையா, அதி நம்பிக்கையா?
தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது. கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. ‘எல்லார்க்கும் எல்லாம்‘ என்ற சமத்துவ – சமூகநீதிப் பாதையில் சிறப்பாக செயல்படுகிறது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து வெற்றியை வழங்குகின்றனர். இந்த வெற்றி பயணம் தொடரும்.

* அதிமுக-பாஜக கூட்டணி திமுக ஆட்சியின் மீது வைக்கும் பிரதான குற்றசாட்டு ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான். உங்கள் அமைச்சரவை சகாக்கள் மீதே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அடிக்கடி உங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அல்லது அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்துகிறது. உங்கள் பதில் என்ன?
திராவிட மாடல் அரசின் கீழ் சிறந்த நிர்வாகத்தை கொடுத்திருக்கிறோம். அதிமுக சீரழித்த நிர்வாகத்தை செம்மைப் படுத்தியிருக்கிறோம். அரசின் பல்வேறு சாதனைகளைப் பார்த்து – மகளிருக்கு நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களைப் பார்த்து பொறாமைப்படுவோர்- அதை திசை திருப்ப அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். பாஜ முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் என்ன ஆகின்றன என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறையின் சோதனைகளைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கும், பிற கட்சிகளை மிரட்டி கூட்டணி வைப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். மொத்தத்தில் ஈடி என்பது பாஜ வாஷிங் மெஷினுக்கான ஏஜென்ட் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். நாங்கள் மக்கள் மேலும் – எங்களின் வளர்ச்சி திட்டங்களின் மீதும்-நீதியின் மேலும் நம்பிக்கை வைத்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

* ஏப்ரல் 18 அன்று நடந்த ஒரு அரசு விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையான விமர்சிக்க காரணம் என்ன? தமிழ்நாடு தேர்தலில் அவர் அதிக அக்கறை கொள்வதாலா, அல்லது அவருடைய குற்றச்சாட்டிற்கு பதிலா?
எதையாவது சொல்லி தமிழ்நாட்டிற்குள் கால் பதித்து விடலாமா என்று பாஜ எண்ணுகிறது. அந்த எண்ணத்தின் வெளிப்பாடுதான் அந்தக் கட்சியினர் வெளியிடும் பொருளற்ற கருத்துகள். அவற்றுக்குபதிலளிப்பதில் நான் மட்டுமல்ல பிற அரசியல் கட்சித் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாஜ தமிழ்நாட்டிற்கு செய்துவரும் கேடுகளையும், ஜனநாயகத்துக்கு ஏற்படுத்திவரும் இழுக்குகளையும் மக்கள் மன்றத்தில் நாம் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குவோம். அவர்கள் மக்களுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi