சென்னை: சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தேசிய மருத்துவ ஆணையம், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் திருச்சி, தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
ஒன்றிய பாஜ அரசின் இந்நடவடிக்கையால் இந்த மூன்று கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மருத்துக்கல்விக்கான 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தடைபடும்.
தேசிய மருத்துவ ஆணையம் கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. மேற்கண்ட மருத்துவக்கல்லூரி நிர்வாகங்கள் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அங்கீகாரத்தை ரத்து செய்தது வன்மையான கண்டனத்துக்கு உரியது. மிகச் சாதாரணமான காரணங்களைக் கூறி தமிழ்நாட்டில் சிறப்பாக இயங்கி வரும் மூன்று மருத்துவக் கல்லூரிகளை முடக்க ஒன்றிய பாஜ அரசு முனைந்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இதனை நியாயப்படுத்தவே முடியாது. எனவே ஒன்றிய அரசு, சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.