டெல்லி : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பதக்கங்களை ஆற்றில் எரிய முயன்ற சம்பவத்தில் மோடி அரசு மவுனம் காப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநட்டே, இந்தியாவின் மகள்கள் தாக்கப்பட்டார்கள் என்றும் லத்தியால் அடி வாங்கினார்கள் என்றும் ஷூ அணிந்த கால்களால் மிதிக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் சுய மரியாதை மீது தாக்குதல் தொடுத்தால் ஒன்றிய அரசு அதற்கான விலையை கொடுக்க வேண்டியது வரும் என்றும் சுப்ரியா எச்சரித்துள்ளார். பாலியல் வழக்கில் தொடர்புடைய பிரிஜ் பூஷன் இன்னும் ஏன் கைது செய்யப்படவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி பிரஜ்பூஷண் சரண்சிங் -ஐ கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும். மோடி அரசே, நீதியைக் கொல்லாதே! குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாதுகாத்திட முயற்சிக்காதே! ” என்று பதிவிட்டுள்ளார்.