சென்னை: மதுரையில் இருந்து நேற்று சென்னை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: அஜித்குமார் படுகொலை வழக்கில் தொடர்புடையவர் சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. புகார்தாரரான நிகிதா மருத்துவர் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவர் பிஎச்டி பட்டம் பெற்றவர் என்றும், அவர் குடும்பத்தினர் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு உள்ளதும் தற்சமயம் வெளியாகி உள்ளது.
அதுகுறித்தும் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர் கோயிலுக்கு நகை கொண்டு வந்தாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆகவே இந்த வழக்கில் அது குறித்து, விசாரணை மேற்கொள்வதும் முக்கியமானதாக உள்ளது. அவருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் அது மறுக்கப்பட்டுள்ளது. நிகிதா கோயிலுக்கு நகைகள் கொண்டு வந்தார என்பது குறித்து, தனி வழக்காக பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுகவின் தமிழ்நாடு காப்போம் என்ற முன்னெடுப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் பாஜ, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளுடன் சேர்ந்து, எப்படி இபிஎஸ் நாட்டை காப்பாற்ற போகிறார் என்பதுதான் சந்தேகமாக உள்ளது. அவர்களால் தான் நாட்டிற்கு ஆபத்து.காவல்துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கெட்டவர்களும் இருக்கிறார்கள். மூர்க்கத்தனமானவர்களும் இருக்கிறார்கள். பொதுமக்களை பாதுகாக்க கூடிய வகையில் பயிற்சி தேவைப்படுகிறது. காவல்துறையினர் மக்களிடத்தில் அணுகும் முறை, பல வன்முறைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.