Wednesday, November 29, 2023
Home » ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி!: கி.வீரமணி விமர்சனம்

ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி!: கி.வீரமணி விமர்சனம்

by Lavanya

சென்னை: ஜனநாயக விரோத பி.ஜே.பி. ஆட்சியை வரும் தேர்தலில் தோற்கடிப்பதே ஜனநாயகத்தைக் காப்பதற்கு ஒரே வழி என கி.வீரமணி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, குஜராத் மாநிலத்தைச் சார்ந்த சூரத்திலிருந்து சஞ்சய் ஈழ வா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட விவரங்களைக் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.அவருக்குக் கிடைத்த பதில்மூலம் வெளியாகியுள்ள தகவல்கள் உலகின் ஜனநாயகவாதிகள் அனைவரையுமே அதிர்ச்சியூட்டுபவையாக அமைந்துள்ளன! 9 ஆண்டுகளில் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் 141 பேர் 2014 முதல் நேற்று (3.11.2023)வரை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை- 9 ஆண்டுகளில் 141 பேர்! அத்துணைப் பேரும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களே!இதில், ஆளுங்கட்சியிலிருந்து ஒருவர்கூட கிடையாது என்பதும், அது அதைவிட அதிசயமானதும்கூட! (353 ஆளுங்கட்சி (பி.ஜே.பி.) உறுப்பினர்கள் – இரு அவைகளிலும்).

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தை எப்படி ‘‘மதிக்கிறது’’ என்பதற்கு இதைவிட நல்ல நடைமுறை விளக்கம் – எடுத்துக்காட்டு வேறு தேவையா?ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அத்துணைப் பேரும் அவ்வளவு கட்டுப்பாட்டுடன் அவையின் மாண்புக்குரிய முறையிலேயே நடந்துகொண்டதால்தான் அவர்களில் எவரும் இடைநீக்கமே செய்யப்படவில்லை என்று அறுதியிட்டு, உறுதிப்பட பா.ஜ.க. பதில் அளிக்க முடியுமா? நாடாளுமன்றக் கூட்டத்திலேயே இஸ்லாமிய உறுப்பினரை வசை பாடிய பி.ஜே.பி. உறுப்பினர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற குறுகிய கால நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சியைச் சார்ந்த ஓர் (இஸ்லாமிய) உறுப்பினரை எவ்வளவு வசைமொழிகளில் தரம் தாழ்ந்து பா.ஜ.க. உறுப்பினர் பேசி, அவையின் நாகரிகத்தையே தலைகவிழச் செய்தார் என்பதை நாடும், மக்களும் மறந்திருக்கமாட்டார்கள்.

அவர்மீது எந்தவிதமான நடவடிக்கையும் பாயவே இல்லையே!. அவர் 5 மாநிலத் தேர்தல் மேற்பார்வையாளராக – ஒரு மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையால் நியமிக்கப்பட்டு, அவர் முதுகைத் தட்டிக் கொடுத்துள்ளனர் – பரிசு வழங்கியல்லவா உள்ளது! நாடாளுமன்றத்திலேயே கோட்சேவைப் புகழ்ந்து பேசிய பி.ஜே.பி. உறுப்பினர் மாலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிரக்யாசிங் தாகூர் என்பவர் ஜாமீனில் வந்து, பா.ஜ.க. எம்.பி.,யாக தேர்வு பெற்றவர். காந்தியைக் கொன்ற கோட்சேவை அவையில் புகழ்ந்து பேசியதைவிட, அருவருப்பு நிறைந்த அவமதிப்பு வேறு உண்டா? கட்சித் தலைமை கண்டித்தது உண்டா?இப்படி கடந்த 9 ஆண்டுகளில் எண்ணற்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்ட முடியுமே! மாநிலங்களவையில் 98 எதிர்க்கட்சியினர் உள்ளனர். மக்களவையில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 192 பேர்! மொத்தம் 290 பேர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

இந்த எண்ணிக்கையில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சுமார் 50 சதவிகிதம் – சரி பகுதியினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்! உலக நாடுகளின் – ஜனநாயகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு சார்பு நிகழ்வு எங்காவது நடந்திருக்குமா? ஜனநாயகவாதிகள் கைகொட்டி நகைப்பர்!10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் வெறும் 45 பேரே! இதற்குமுன் 10 ஆண்டுகால அய்க்கிய முற்போக்குக் கூட்டணி – யு.பி.ஏ. ஆட்சியில் பிரதமராக மன்மோகன்சிங் (தி.மு.க.வும் மற்ற கட்சிகளும் பங்கேற்ற கூட்டணி ஆட்சி) 2001 ஆம் ஆண்டுமுதல் 2014 ஆம் ஆண்டுவரை மொத்தமே 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள். இதில் 25 எம்.பி.,க்கள் ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள். அதுவும் மக்களவை – மாநிலங்களவை நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்ட எம்.பி.,க்கள் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டனர்.ஜனநாயகம் காப்பாற்றப்பட ஒரே வழி வரும் தேர்தலில் பி.ஜே.பி.யைப் படுதோல்வி அடையச் செய்வதே! பிரதமர் மோடி ஆட்சி – கடந்த 9 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள், முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என 54 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் அதிகபட்சமாக நீக்கம் செய்யப்பட்டவர்கள்

காங்கிரஸ் – 43
அ.தி.மு.க. – 34
தெலுங்குதேசம் – 14
ஆம் ஆத்மி – 1
மற்ற கட்சிகளில் ஒரே ஒரு எம்.பி.,
மாநிலங்களவையில் அதிகபட்சமாக நீக்கம் செய்யப்பட்டவர்கள் –
திரிணாமுல் காங்கிரஸ் – 14
காங்கிரஸ் – 11
ஆம் ஆத்மி – 6
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5
தி.மு.க. – 5
பி.ஆர்.எஸ். – 3
இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.அய்) – 2
சிவசேனா (யுடிபி) – 2
தன்முனைப்புக்கு இடம் தரக்கூடாது!
இதற்கு ஒரே பதில், மீண்டும் ஜனநாயகம் காப்பாற்றப்பட பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை வரும் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து, வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர, ஜனநாயகம், இந்திய அரசமைப்புச் சட்டம் பிழைக்க வேறு வழியே இல்லை. வாக்காளர்களே, இதனை மனதிற்கொள்ளுங்கள். எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் இதில் ஒற்றுமையுடன் இருந்து ‘இந்தியா’ கூட்டணி வெற்றி வாகைசூட அனைத்து முயற்சிகளையும் – தன்முனைப்புக்கு இடம்தராது செய்யவேண்டியது அவசர அவசியமாகும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?