மேட்டுப்பாளையம்: பில்லூர் அணை நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததை அடுத்து நீர் திறக்கப்படுகிறது. பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,140 கனஅடியாக உள்ளது. பவானி மேம்பாலத்தில் தண்ணீர் செல்வதை ஆட்சியர் பவன்குமார், எஸ்பி கார்த்திகேயன் ஆய்வு செய்தனர். காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிரச்சனைக்குரிய பகுதிகளை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் தயார் என கோவை ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 26 பேர் தயாராக உள்ளனர். பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளது.