பாட்னா: பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள 58 நகராட்சிகளில் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 816 பதவிகளுக்கு தேர்தல் நடத்த இருந்த நிலையில், 9 பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்றைய தேர்தலில் 31 தலைமை கவுன்சிலர் பதவிகளுக்கும், 31 துணை தலைவர் பதவிகளுக்கும், 714 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.
வார்டு கவுன்சிலர் பதவிக்கு 3,457 பேரும், தலைமை கவுன்சிலர் பதவிக்கு 423 பேரும், துணை தலைவர் பதவிக்கு 391 பேரும் களத்தில் உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிகிறது. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.