பாட்னா: பீகாரில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இன்னும் 10 நாட்களில் இந்த பணி நிறைவு பெற உள்ள நிலையில் பீகார் வாக்காளர்கள் 7.89 கோடி பேரில் 6.60 கோடி பேர் மனு கொடுத்துள்ளனர். இதில் 1.59 சதவீத வாக்காளர்கள் இறந்துவிட்டதும், 2.2 சதவீதம் பேர் நிரந்தரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதும், 0.73 சதவீதம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. தீவிர திருத்தத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை 25 ஆம் தேதிக்கு முன்பு கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பிக்கப்படாத பெயர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது.
இதுவரை கொடுத்த மனுக்கள் அடிப்படையில் பீகார் சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இருந்து 35.5 லட்சம் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்க உள்ளது. இறந்து விட்ட 1.59 சதவீத வாக்காளர்கள் 12.5 லட்சம் பேர், பீகாரில் இருந்து இடம் பெயர்ந்த 2.2 சதவீதம் பேர், அதாவது 17.5 லட்சம் வாக்காளர்கள் ஆவர். 0.73 சதவீதம் பேர், அதாவது சுமார் 5.5 லட்சம் பேர், இரண்டு முறை பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்த கண்டுபிடிப்புகள் பீகாரின் வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 35.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது.



